×

கோவை வன நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

கோவை, பிப்.17:  கோவை வனபகுதியில் உள்ள வனநீர் தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.   
கோவை வனக்கோட்டம் போளூவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் என 7 வனசரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தில் யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது, வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. வனத்தில் மழை பொழிவு இல்லை. வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், வனத்தில் மரங்கள், செடிகள் கருகியுள்ளன. வனப்பகுதியில் உள்ள ஆறு, நீரோடை, குளம், சிறு குட்டைகள், தடுப்பணைகளில் வறட்சி காரணமாக தண்ணீர் இல்லை.
இதனால், வனவிலங்குகள் தண்ணீர் தேவைக்காக வனத்தில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வனத்துறை சார்பில் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வன நீர்தேக்க தொட்டிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, போளூவாம்பட்டி, மதுக்கரை, கோவை வனசரகத்தில் உள்ள 20 வனநீர் தேக்க தொட்டிகளில் தற்போது வனத்துறையினர் லாரியின் மூலம் தண்ணீர் நிரப்பும் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த வன நீர்தேக்க தொட்டிகள் சிறிய விலங்குகள் மற்றும் பெரிய விலங்குகள் குடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட கரடிமடை வனப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு நீர்தேக்க தொட்டிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை சுமார் 24 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் வனவிலங்குகள் வனகிராமங்களில் நுழைவதை தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Coimbatore Forest Reservoirs ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...