கோவை, பிப்.17: கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘‘இன்றைய இந்திய இளைஞர்கள் ஆற்றலின் அடையாளமாக திகழ்கின்றனர்.
பட்டதாரிகள் அறிவும், திறமையும் நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும். மாணவர்களின் அறிவையும் திறமையையும் வெளிப்படுத்தும் நுட்பத்தை கற்றுத் தருவதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்’’ என்றார்.
விழாவில், கல்லூரி செயலர் மற்றும் இயக்குனர் டாக்டர் வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் லட்சுமணசாமி ஆண்டறிக்கை வாசித்தார். பட்டமளிப்பு விழாவில் 1077 பேர் இளங்கலை பட்டத்தையும், 312 பேர் முதுகலை பட்டத்தையும் பெற்றனர். மேலும் முதல் தரநிலை பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் 34 பேருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.