கோவை, பிப்.17: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 66 குழந்தைகளுக்கு உதட்டுபிளவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம் (டி.இ.ஐ.சி.) செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு மூளை வளர்ச்சி, உதட்டு பிளவு, பிறவியிலேயே கண்புரை கோளாறு, காது கேளாமை, பிறவியில் ஏற்படும் இதய நோய்கள், தலசிமியா, ரத்த சோகை, தோல் நோய்கள் உள்பட 23 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோய் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிவதற்காக மாவட்டம் முழுவதும் டாக்டர் ரவிசங்கர் தலைமையில் 27 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் உள்ளனர். இவர்கள் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் வீடுகளுக்கு நேரில் சென்று குழந்தைகளுக்கு பரிசோதனை செய்கின்றனர்.
இதில் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அரசு மருத்துவமனையில் அவர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கின்றனர்.
இதில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உதட்டு பிளவு பாதிப்பு இருந்த குழந்தைகள் 66 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அசோகன் கூறினார்.