மாநகர பகுதிகளில் போதை பிடியில் சீரழியும் மாணவர்கள்

கோவை, பிப்.17: கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார்  கடந்த வாரம் 5ம் தேதி அவினாசி ரோட்டில் கல்லூரிகள் மற்றும் அதன்  சுற்றுப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 2  பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் போதை மருந்து அட்டை வைத்திருப்பது  தெரியவந்தது.

விசாரணையில் பாலக்காட்டை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் மகன் தீபக்  (23), சித்தூரை சேர்ந்த பாபு ஜெயன் மகன் ஸ்ரீஜித் (21) என என தெரியவந்தது.  இதில் ஸ்ரீஜித் பி.இ படித்து வருகிறார்.

தீபக் பட்ட படிப்பு  முடித்துள்ளார். இவர்களை கைது செய்த போலீசார் விசாரித்த போது பல்வேறு  திடுக்கிடும் தகவல் வெளியானது.  

இவர்களிடம் மெத்தாம் பெடாமைன் மாத்திரைகள்,  எல்.எஸ்.டி என்ற போதை மருந்து தடவிய 20 அட்டைகளை பறிமுதல் செய்தனர். இரு  வாரம் முன் இதேபோல் 3 வாலிபர்களை போலீசார் போதை மருந்து விவகாரத்தில்  பிடித்து கைது செய்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை மருந்து  கோவைக்கு எப்படி வந்தது, யார் சப்ளை செய்தார்கள், யார்  பயன்படுத்துகிறார்கள் என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை  நடத்தினர். இதில் பீளமேடு, கணபதி, சிங்காநல்லூர், கோவைப்புதூர் உள்ளிட்ட  சில பகுதிகளில் போதை மாத்திரை பயன்பாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விடுதிகளில், வாடகை வீடுகளில் வசிக்கும் மாணவர்கள் சிலர் மருந்து போதைக்கு  அடிமையாக இருக்கும் தகவலை போலீசார் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக  கோவை என்.ஐ.டி டி.எஸ்.பி வின்சென்ட் கூறியதாவது:  மெத்தாம் பெடாமைன்,  லைசர்ஜிக் டைதாலமைடு  (எல்.எஸ்.டி) என்ற தடை செய்யப்பட்ட மருந்தை போதைக்கு  விற்பனை செய்கிறார்கள். இதை தட்டு வடிவிலான சம தள பேப்பரில் ஸ்டாம்ப் போல்  தடவி பயன்படுத்துகிறார்கள்.

இது பல வண்ணங்களில் விற்கிறார்கள். கல்லூரி  மாணவர்களை குறி வைத்து ஒரு மாத்திரை ஆயிரம் ரூபாய் முதல் 2,500 ஆயிரம்  ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. கோவை நகரில் இந்த  மாத்திரை கிடைப்பதில்லை. பெங்களூர், கோவாவில் இருந்து மாத்திரை கடத்தி  வந்து வாங்கும் தகுதியுள்ளவர்களை தேடி பிடித்து விற்கிறார்கள்.

திகிலூட்டும், மனதை மாற்றும் போதை வஸ்துவாக எல்.எஸ்.டி இருக்கிறது. 24 மணி  நேரம் இந்த போதை இருக்கும்.

முகம், உடலில் எந்த மாற்றமும் தெரியாது.  ஆனால் போதை மாத்திரை பயன்படுத்துபவர்கள் 4 முதல் 6 மணி நேரம் ஆட்டம்,  பாட்டம் என ஜாலியாக இருப்பார்கள். அதற்கு பிறகு உடல் தளர்ந்து விடும். 16 மணி  நேரம் வரை தொடர்ந்து தூங்கி விடுவார்கள். இந்த போதையில் இருப்பவர்களுக்கு  என்ன நடக்கிறது என தெரியாது. உடல், மன ரீதியான மாற்றத்தை பெற இந்த போதையை  சிலர் விரும்புகிறார்கள். பார்ட்டி, கூட்டங்களில் இந்த போதை மாத்திரை  பயன்படுத்தப்பட்டுள்ளதா என விசாரணை நடத்துகிறோம்.

 இந்த மாத்திரையை  தேடி  வாங்குவதாக தெரியவந்துள்ளது. சர்வதேச மருந்து மாபியா கும்பல் மூலமாக  கோவைக்கு இந்த மாத்திரைகள் கடத்தி வரப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மருந்து  பயன்படுத்தியவர்களின் செல்போன் எண் தொடர்புகளை வைத்து முதல் கட்ட விசாரணையை  நடத்தியிருக்கிறோம். கோவா, பெங்களூரில் இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.  உள்நாட்டில் இதுபோன்ற போதை மருந்து தயாரிக்க முடியாது. வெளிநாட்டில்  இருந்து இந்த மருந்துகளை கடத்தி வந்திருக்க முடியும். மருந்து எங்கே  இருக்கிறது வருகிறது, யார் மூலமாக கடத்தல் நடக்கிறது என்ற விசாரணை  நடக்கிறது, ’’ என்றார்.

Related Stories: