ஈரோடு, பிப். 17: கீழ் பவானி வாய்க்கால் (எல்.பி.பீ) பாசனத்தில் உள்ள 33 கசிவு நீர் குட்டைகளின் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், எல்.பி.பீ பாசனம் மூலம் 34 இடங்களில் கசிவு நீர் குட்டைகள் உளளன. கவுந்தபாடி கசிவு நீர் குட்டை பாழடைந்து விட்டதால் 33 கசிவு நீர் குட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த கசிவு நீர் குட்டைகளுக்கு செல்லும் நீர் பாதைகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசின் மானிய கோரிக்கையின் போது நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.