×

செயற்குழு கூட்டம்

ஈரோடு, பிப். 17:   உழைப்பாளி மக்கள் கட்சியின் சார்பில் ஈரோட்டில் நேற்று மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவன தலைவர் ராமகோபால தண்டாள்வர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வருக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வது, அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தை அடுத்த ஆண்டிற்குள் செயல்படுத்தி முடிக்க வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும், வெளிநாட்டு மணல் விற்பனையை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும், அரசு கட்டுமானத்திற்கு என தனியாக ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் போயர் சமுதாயத்திற்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

 மேலும் ஒப்பந்த பணிகளில் போயர் ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், கல்லுடைக்கும் தொழிலாளர் வாரியம், போயர் தொழிலாளர் நலவாரியம் ஆகிய வாரியங்களை அமைக்க வேண்டும், அடுத்து தொடங்கவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும், நான்கு மற்றும் ஆறுவழிச்சாலைகளில் வேம்பு, புளியமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை கூடுதலாக நிறுவ வேண்டும். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை கொண்டு வர வேண்டும், தமிழக கட்டுமான நலவாரியத்தில் ஓய்வூதியமாக ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் குப்புசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ராஜ், தொழிற்சங்க பொதுச் செயலாளர் சரவணன், மாநில கொள்கைபரப்பு செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Executive Committee Meeting ,
× RELATED டூவீலர் மெக்கானிக் சங்க மாநில செயற்குழு கூட்டம்