பவானி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் 2வது கணவர் கைது

பவானி, பிப். 17:  பவானியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் 2வது கணவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி  அருகேயுள்ள காலிங்கராயன்பாளையத்தில் 30 வயது பெண் வசித்து வந்தார். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் உயிரிழந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (34)  என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். கடந்த 8ம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண் வேலைக்கு  சென்றுவிட்டார்.

அப்போது, இரண்டாவது கணவர் சதீஸ் பாதுகாப்பில், மனைவியின் முதல் கணவரின் 15 வயது மகள் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சதீஷ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்துள்ளார். இது குறித்து, குழந்தைகள் நலப்பிரிவு 1098 கட்டணமில்லா  தொலைபேசி எண்ணுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  சைல்டு லைன் ஆலோசகர் பாரதி, பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். இதன்பேரில், போலீசார் சதீஷை கைது செய்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: