பவானி, பிப். 17: பவானி அருகே குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒரிச்சேரி காலனி மக்கள் தவித்து வருகின்றனர்.
பவானி ஊராட்சி ஒன்றியம், ஒரிச்சேரிப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரிச்சேரி காலனி உள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், இப்பகுதியைச் சேர்ந்தோர் பெரும்பாலும் தினக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு வாழையிலை அறுக்கும் பணிக்குச் செல்வதோடு, கிடைக்கும் வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். மூன்று தெருக்களைக் கொண்ட இப்பகுதியில் குடியிருப்புகளிலிருந்து கழிவுநீர் செல்ல முறையான சாக்கடை வசதியில்லை. போதிய தண்ணீர் இல்லாததால் வீடுகளில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல், பொருட்களைப் போட்டு வைக்கும் கிடங்குகளாக உள்ளன.