பவானி பிப். 17: பவானி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் பவானி தாசில்தார் பெரியசாமி தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பவானியை அடுத்த காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், திப்பிசெட்டிபாளையம், சீதபாளையம், சின்னமோளபாளையம், ஜம்பை உள்ளிட்ட கரையோரப் பகுதியில் இச்சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, சேர்வராயன்பாளையம் பகுதியில் மணல் திருடுவதற்காக பேரல்களைக் கொண்டு, பரிசல் போல் தயார் செய்து வைத்திருப்பது தெரியவந்தது.இந்நிலையில், அதிகாரிகள் வருவதை பார்த்த மணல் கடத்தல் கும்பல் தப்பியோடிவிட்டது. இதைத்தொடர்ந்து பேரல்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பவானி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.