செயல்அலுவலரின் ஊழியர் விரோதபோக்கு கண்டித்து அரசு பணியாளர் சங்க கோரிக்க விளக்க கூட்டம்

தஞ்சை, பிப்.17: தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் வீட்டுக்குடிநீர் குழாய் இணைப்பு கட்டண அதிகளவில் பாக்கியுள்ளதாகவும், அதனால் அப்பேரூராட்சியில் பணியாற்றும் தெருவிளக்கு மின் பணியாளர் கோபி என்பவருக்கு நிலுவைத் தொகை ரூ.52.34 லட்சத்திற்கு பொறுப்பாக்கி மாதந்தோறும் அவரது ஊதியத்தில் ரூ.10 ஆயிரம் பிடித்தம் செய்ய ஊதியப்பிடித்த ஆணையை முத்துப்பேட்டை செயல் அலுவலர் பிறப்பித்துள்ளார். இது முற்றிலும் அரசு மற்றும் சட்ட விதிகளுக்கு முரணான செயலாகும்.இதை மறு பரிசீலனை செய்ய தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு கடிதம் மூலமும், நேரிலும் வலியுறுத்தப்பட்டும் அது பொருட்படுத்தப்படவில்லை. தொடர்ந்து கோபி என்பவரின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுவது கண்டனத்திற்குரியது. எனவே செயல் அலுவலரின் பணியாளர் விரோத போக்கை கண்டித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் திரண்டனர். இதையடுத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹீன் அபுபக்கருடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில தலைவர் சிவக்குமார், பேரூராட்சி பணியாளர் சங்க மாநில தலைவர் பழனிவேல், திருவாரூர் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மண்டல பேரூராட்சி செயல் திறன் வாய்ந்த உதவியாளர் சங்க தலைவர் முரளிதரன், மாநில துணை தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் குணசீலன், நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில பொருளாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் தரும.கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: