தஞ்சை, பிப். 17: கல்லணைக் கால்வாயை நீட்டித்தல், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.300 கோடி குறித்து தெளிவான விவரம் வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவோணம் உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு கல்லணைக்கால்வாய் மூலம் காவிரி பாசன நீர் சென்றடைவதில் ஆண்டுதோறும் பிரச்சனைகள் இருந்து வருகிறது. கல்லணைக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு முழு கொள்ளளவிற்கு பாசன நீர் கொண்டு செல்வதில் நெருக்கடிகளும், சிக்கல்களும் உள்ளது.இதனால் கடைமடைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளால் முறையாக விவசாயம் செய்ய முடியாத நெருக்கடி நிலை ஆண்டுதோறும் ஏற்படுகிறது. கல்லணைக் கால்வாய் பாசன நீர் கிடைக்காத விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கமாகி வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு நபார்டு வங்கி உதவியுடன் ரூ.147 கோடி மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாயில் முதற்கட்டமாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.நபார்டு வங்கி உதவியுடன் அன்றைய மதிப்பில் ரூ.272 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் நிலைப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்படாமல் கைவிடப்பட்டது. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இரண்டாம் நிலைப் பணிகள் நடைபெறவில்லை. இப்பணிகள் துரிதமாக நடைபெற்றிருந்தால் கடைமடை பகுதி விவசாயம் இன்றைய நிலையில் இருந்து பெருமளவிற்கு மேம்பட்டிருக்கும். அரசியல் காரணங்களை மையப்படுத்தி இரண்டாம் நிலைப்பணிகள் கைவிடப்பட்டது டெல்டா விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.