சுகாதாரத்துறை கவனிக்குமா? கரந்தை அருகே பூக்குளத்தில் சாக்கடை கலந்த குடிநீர் பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சை, பிப்.17: தஞ்சையில் சாக்கடையுடன் கலந்து குடிநீர் வருவதை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை கரந்தை அருகே உள்ள பூக்குளத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. அந்நீரானது குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படவில்லை என கூறி வந்தனர். இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பூக்குளம் பகுதி மக்கள் காலிகுடங்களுடன் நேற்று மதியம் பழைய திருவையாறு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த எம்.எல்.ஏ.நீலமேகம், மாநகராட்சி அதிகாரிகள், மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Related Stories: