×

தண்டராம்பட்டு அருகே வளைகாப்பு விழாவில் விருந்து சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, மயக்கம் 4 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை

தண்டராம்பட்டு, பிப்.17: தண்டராம்பட்டு அருகே வளைகாப்பு விழாவில் விருந்து சாப்பிட்ட 35 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தண்டராம்பட்டு அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்(50). இவரது ராணி(40). இவர்களது மூத்த மகள் அஸ்வினி(25). இவருக்கும் துரைப்பாடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான அஸ்வினிக்கு கடந்த 5ம் தேதி துரைப்பாடி கிராமத்தில் வளைகாப்பு விழா நடந்தது. தொடர்ந்து, கடந்த 12ம் தேதி பழையனூர் கிராமத்தில் அவரது தாய் வீட்டில் மறுவளைகாப்பு விழா நடந்தது. இதையொட்டி, மணிகண்டன் குடும்பத்தினர் பல்வேறு வகையான உணவுகளை சமைத்து கொண்டு வந்து, விழாவில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு பரிமாறினர்.

இதை சாப்பிட்டவர்களில் 35 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், தகவலறிந்த மருத்துவக்குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழையனூர் கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களுக்கு பல்வேறு உடல் பரிசோதனைகளை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : baby shower ceremony ,Dandarampattu ,
× RELATED கடந்த ஆண்டு ஒரு கிலோ ₹10 முதல் ₹13 வரை...