குடியாத்தம் அருகே ஒற்றை யானை தொடர் அட்டகாசம் விரட்டியடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்

குடியாத்தம், பிப்.17: குடியாத்தம் அருகே ஒற்றை யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசம் செய்து வருவதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதியில் இருந்து சுமார் 10 வயதான ஆண் யானை ஒன்று குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள பொட்டமிட்டா, மோர்தானா, மோடிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. இதனால் யானையை விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமம் அருகிலுள்ள விவசாய நிலத்துக்குள் திடீரென ஒற்றை யானை நுழைந்தது. அங்கு பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மற்றும் வாழை மரங்களை சேதம் செய்து பயங்கர சத்தத்துடன் பிளிறி வருகிறது.இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும், மிளகாய் பொடி தூவியும் விவசாயிகள் உதவியுடன் யானையை மீண்டும் காட்டிற்குள் விரட்டியடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அனுப்பு கிராம மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். ஒற்றை யானையை நிரந்தரமாக விரட்டியடிக்க கும்கி யானையை குடியாத்தம் வனப்பகுதிக்கு வரவழைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: