குலசேகரம், பிப். 17: குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுவதால், எல்லா சீசன்களிலும் தண்ணீர் கொட்டுவது வழக்கம்.இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகு, கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீரூற்றுகள் வறண்டு கோதையாற்றில் சிறிதளவே தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது.
கோடையை மிஞ்சும் வண்ணம் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், விடுமுறை தினம் என்பதாலும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று திற்பரப்பு அருவியில் கடுமையான கூட்டம் அலைமோதியது. அருவியில் குறைந்த அளவு தண்ணீர் கொட்டுவதால் குளிக்கும் பகுதியில் பகல் நேரங்களில் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. இதேபோன்று வாகனங்களின் நெருக்கமும் அதிகரித்து இருந்தது.