சென்னை: ஆந்திராவிற்கு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சவாரி சென்ற மெடிக்கல் ஷாப் பெண் ஊழியரை, டிரைவர் மிரட்டி ஆட்டோவிலேயே பலாத்காரம் செய்ய முயன்றார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராணி (22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை குன்றத்தூர் அருகே உள்ள கோவூரில் தங்கி மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதால் ராணி ஆந்திராவில் உள்ள சொந்த ஊருக்கு செல்ல பஸ் மூலம் நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கம் வந்துள்ளார். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல ராணி ஆட்டோ ஒன்றை பிடித்து சென்றுள்ளார். பெரியமேடு அல்லிக்குளம் லிங்க் ரோடு அருகே இரவு 9.15 மணிக்கு ஆட்டோ வந்தபோது வெளிச்சம் மற்றும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத லிங்க் ரோடு பகுதிக்கு ஆட்டோவை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். பின்னர் இருட்டில் ஆட்டோவை நிறுத்திய டிரைவர் பயணி ராணியை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராணி அலறினார். ஆனால் ஆட்டோ டிரைவர் ராணியின் ஆடையை கழற்ற முயன்றுள்ளார். அப்போது ராணி ஆட்டோ டிரைவரை தனது கால்களால் உதைத்து தள்ளிவிட்டு ஆடைகள் கலைந்த நிலையில் உதவி கேட்டு கூச்சலிட்டபடி சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி ஓடி வந்தார். அல்லிக்குளம் நீதிமன்றம் அருகில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதை பார்த்து இளம்பெண்ணை மடக்கி விசாரித்தபோது ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை கூறினார்.