விமானம் மூலம் இலங்கைக்கு ஹெராயின் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சென்னை, பிப் 15:  சென்னை ராயப்பேட்டை ஜானி ஜான்கான் ரோட்டை சேர்ந்தவர் முனவர் பாஷா (37). இவர் கடந்த 30.3.2017 அன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கைக்கு விமானம் மூலம் ஹெராயின் போதைப்பொருள் கடத்துவதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, முனவர் பாஷா விமானத்தில் புறப்பட உள்ளே சென்றார். அதிகாரிகள் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தினர். அப்போது, அவரது பெட்டியில் 800 கிராம் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்புபிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செல்லதுரை ஆஜராகி வாதிட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முனவர் பாஷா வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ₹2 லட்சம் அபரதமும் விதிக்கப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: