கணவனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை சரமாரி கத்தியால் குத்திய கர்ப்பிணி : ஆதம்பாக்கத்தில் பரபரப்பு

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் கர்ப்பிணி இளம்பெண் தனது கணவனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்  அபுசாலி முஸ்தபா உசேன் (22). இவரது  மனைவி  ருஸ்தானா பேகம் (18). இவர்கள், கடந்த 8 மாதங்களாக ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 11வது தெருவில் வசித்து வருகின்றனர். அதேபோல், அசாம் மாநிலத்தை சேர்ந்த தஜ்மல் அகமது (22) என்பவர், ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வருகிறார். அபுசாலியும், தஜ்மலும்  நண்பர்கள். இவர்கள் இருவரும் வேளச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இதனால், அபுசாலி வீட்டிற்கு தஞ்மல் அடிக்கடி வந்து சென்றுள்ளார். தற்போது, ருஸ்தானா 6 மாத கர்ப்பிணியாக  இருப்பதால், அவசர நேரத்தில்  ஏதாவது உதவி செய்யுமாறு அபுசாலி,  தஜ்மலிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, தஜ்மலும் அடிக்கடி  அபுசாலி வீட்டுக்கு சென்று ருஸ்தானாவுக்கு  உதவி செய்து வந்தார்.  இந்த பழக்கம், கள்ளக்காதலாக மாறியது. அபுசாலி   இல்லாத நேரத்தில் தஜ்மலும்,   ருஸ்தானாவும்  தனிமையில் இருந்துள்ளனர். இதனை ஒருநாள்  அபுசாலி பார்த்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அதற்கு மனைவி ருஸ்தானாவோ  தஜ்மல்தான் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் என பழியை தூக்கிப்போட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அபுசாலி, நண்பன் தஜ்மலை கொல்ல திட்டமிட்டார். இதற்கு, ருஸ்தானாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நேற்று முன்தினம் தஜ்மலை செல்போனில் தொடர்புகொண்ட ருஸ்தானா, ‘‘வீட்டில் கணவர் இல்லை. உன்னை பார்க்க வேண்டும். வந்து செல்,’’ என கூறியுள்ளார். அதன்படி, தஜ்மல் வந்தபோது வீட்டில் அபுசாலியும் இருந்துள்ளார். அப்போது, தஜ்மலுக்கும், அபுசாலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு  ஒருவரையொருவர்  தாக்கிக் கொண்டனர். அப்போது, ருஸ்தானா வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து தஜ்மலின்  கழுத்து பகுதியில் குத்தினார். கத்தியை பிடுங்கிய அபுசாலி, தஜ்மலின் கழுத்து, நெஞ்சு பகுதியில் சரமாரியாக  குத்தினார். சுதாரித்துக்கொண்ட  தஜ்மல், ரத்தகாயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

பின்னர் நண்பர்கள் உதவியுடன்   ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கொடுத்த தகவலின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து  அபுசாலி மற்றும் அவருடைய மனைவி ருஸ்தானா ஆகியோரை கைது செய்தனர். இதில் அபுசாலியை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  ருஸ்தானா 6 மாத கர்ப்பிணியாக உள்ளதால் காப்பகத்தில்  சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: