ஓசூர், பிப்.13: ஓசூர் காமராஜ் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டு, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். ஓசூர் காமராஜ் நகரை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள், நேற்று மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், காமராஜ் நகர் 7வது குறுக்கு தெரு, துளசி அம்மன் நகர், பெல்லப்ப நகரில் சாந்தபுரம் மெயின் ரோடு, குரு சாய் கார்டன் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தார் சாலை அமைத்து தர வேண்டும். மேலும், சின்ன கைலாசகிரி அண்ணாநகர் முதல் தெருவுக்கு தார்சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மனுவை பெற்ற அவர், ஓரிரு மாதங்களில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, சென்னப்பன், சீமாராஜ், தூரைசாமி, ராஜமாணிக்கம், சுரேஷ், கண்ணப்பன், வெங்கடேஷ், சசிகுமார், முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.