திருச்சி, பிப்.13: திருச்சி ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் போலி ஏடிஎம் கார்டை மாற்றிக்கொடுத்து அவரது கணக்கிலிருந்து ரூ.11 ஆயிரத்தை சுருட்டிய பலே கில்லாடி வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மேலும் பல இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது. திருச்சியில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஒரிஜினல் ஏடிஎம் கார்டுகளை நைசாக மாற்றி போலி ஏடிஎம் கார்டுகளை கொடுத்து பணத்தை அபேஸ் செய்வது தொடர்ந்து வந்தது. இதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையிலான தனிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் திருச்சி புங்கனூர் காந்திநகரை சேர்ந்த பிரபு மனைவி கமலி(24) என்பவர் கருமண்டபம் பகுதியில் வங்கியுடன் இணைந்துள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். அப்போது அருகில் நின்ற வாலிபரிடம் பணம் எடுக்க உதவி கேட்டுள்ளார். அவரும் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து ரகசிய எண்ணை மாற்றி போட்டுவிட்டு பணம் வரவில்லை என்றும், வங்கிக்குள் சென்று விசாரிக்கும்படி கூறியுள்ளார். இதனால் கமலி வங்கிக்குள் சென்று விசாரித்தார். அப்போது அவரது கணக்கை பார்த்த வங்கி ஊழியர் இப்போதுதான் ரூ.11 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கமலி ஏடிஎம்முக்கு வந்து பார்த்தபோது அந்த நபர் பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. கமலியிடம் கொடுத்தது போலி ஏடிஎம் கார்டு என தெரியவந்தது.