×

ஆபத்தை ஏற்படுத்தும் சாலையோர வளைவு

தொண்டி, பிப்.13:  நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள குளத்திற்கு எவ்வித தடுப்பு வேலியும் கிடையாது. வளைவில் இருப்பதால் வாகனங்கள் குளத்தில் புகுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பு தடுப்பு வேலி அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே நம்புதாளை ஊராட்சிக்கு உட்பட்ட காசியார் குளம் கிழக்கு கடற்கரை சாலையில் வளைவு உள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த மாதம் இந்த குளம் தூர்வாரப்பட்டது. இதனால் குளம் மிகவும் ஆழமாக உள்ளது. தற்போது பெய்த மழை நீரை வீணாக்காமல் ஊராட்சியின் சார்பில் துரித பணி செய்து நிறைத்து விட்டனர்.

கடந்த வருடம் தண்ணீர் இல்லாத சமயத்தில் டாக்டர் ஒருவரின் கார் குளத்தின் உள்ளே சென்று விபத்துக்குள்ளானது.  சுற்றுலா சென்ற வேன் ஒன்றும் உள்ளே சென்று கவிழ்ந்தது. அப்போது தண்ணீர் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ள  நிலையில் வாகனங்கள் விபத்து ஏற்பட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. கிழக்கு கடறகரை சாலையில் வளைவில் இருப்பதால் ஆபத்தை தவிர்க்கும் பொருட்டு இக்குளத்தில் தடுப்பு வேலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாவா பகுருதீன் கூறியது, ஊருக்கு வெளியே இருப்பதால் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. அதிவேகமாக வரும் வாகனங்கள் வளைவில் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் சென்று விடுகிறது. தற்போது தண்ணீர் நிறைந்துள்ளதால் தடுப்பு வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும். போர்வெல் குழி போல் இதுவும் ஆபத்தை ஏற்படுத்தினால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இல்லை. அதற்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை