கோவை, பிப். 13: கோவையில் தியாகி என்.ஜி.ராமசாமி 77வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (எச்.எம்.எஸ்) சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தியாகி என்.ஜி.ராமசாமி 77வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ராமநாதபுரம் சுங்கத்தில் உள்ள அவரது சிலைக்கு எச்.எம்.எஸ். மாநில செயலாளர் ராஜாமணி தலைமையில் தொழிற்சங்க தலைவர்கள் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர். இதேபோல், சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைமை அலுவலகம், சவுரிபாளையம் கிளை சங்க அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராஜாமணி தலைமையில் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. மதியம் சவுரிபாளையத்தில் உள்ள செசையர் ஹோம் மனநலம் குன்றிய ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சங்க பொதுச்செயலாளர் மனோகரன், பொருளாளர் சுப்பையன், நிர்வாகிகள் தேவராஜன், ஸ்ரீராம், மருதாசலம், மோகன்ராஜ், காளிமுத்து, பழனிசாமி, தென்றல் நாகராஜ், கருப்புசாமி, செல்வராஜ், கிருஷ்ணன், சேகரன், ராஜாமணி, நிர்மலா, சுலோச்சனா ராஜமாணிக்கம், வெங்கிடுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.