கோவை, பிப்.13: கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 12ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதவுள்ள பிளஸ்-1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு கடந்த 5ம் தேதி துவங்கியது. இதில், அறிவியல், தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் அவர்களின் பள்ளிகளிலேயே நடந்தது. தேர்வுகளை வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கண்காணித்தனர். இந்நிலையில், நேற்றுடன் செய்முறை தேர்வுகள் நிறைவடைந்தது. கோவை ராஜவீதி துணிவணிகர் சங்க பள்ளியில் நேற்று நடந்த செய்முறை தேர்வினை சத்துணவியல் துறை மாணவிகள் ஆரோக்கியமான உணவுகள், டயட் உணவுகள் என பல விதமான உணவுகளை செய்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களின் செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியல் முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டு பின்னர், அரசு தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், செய்முறை தேர்வுகளில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர்.