×

கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை கலெக்டர் அறிவுரை

பெரம்பலூர், பிப். 13: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவையென கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் என்பது சீனா நாட்டில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவ துவங்கிய ஒரு வைரஸ் நோயாகும். இந்த வைரஸ் நோய்க்கு புளூ காய்ச்சல் போன்று காய்ச்சல், இருமல், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும். பொதுமக்களில் எவரேனும் சீனாவின் வூகான் மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் 15ம் தேதிக்கு பின் நாடு திரும்பியவராக இருந்தால் நீங்களாகவே முன்வந்து உடல்நல பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

பரிசோதனை மையங்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்திய மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பு எண்ணான 91-11-23978046 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். நீங்கள் சீனாவில் இருந்து நாடு திரும்பியவராக இருந்தாலோ, கொரானோ வைரஸ் தாக்கிய நபரிடம் இருந்து தொடர்பில் இருந்தாலோ நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து விடவும். மேலும் மற்ற நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் எவரும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் அடுத்த 14 நாட்களுக்கு தனியறையில் ஓய்வெடுக்க வேண்டும். தும்மல் மற்றும் இருமலின்போது வாய் மற்றும் மூக்கை நன்றாக கைக்குட்டை அல்லது உள்ளங்கையால் மூடி கொள்ள வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வந்த பின்பும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் உள்ள நபர்களிடம் இருந்து தனித்து இருப்பது அவசியமாகும். மேலும் வெளியூர் பயணம் செய்ய நேர்ந்தால் நீங்கள் சீனாவில் இருந்து நாடு திரும்பியவராக இருந்தால் உங்கள் காய்ச்சல், தும்மல், இருமல் மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்தால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தை உடன் தொடர்பு கொள்வதுடன் தங்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வெளியிடங்களுக்கு பயணம் செய்ய நேர்ந்தால் அதன் விவரத்தை தங்கள் கிராமத்தில் உள்ள சுகாதார பணியாளர்களிடம் தெரிவித்து விட்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் இருமல் மற்றும் தும்மல் வந்தபின்பும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களை தொடுவதற்கு முன்பும், தொட்ட பின்பும் சமையல் செய்வதற்கு முன்பும், பின்பும், உணவு உண்பதற்கு முன்பும், பின்பும், கழிவறைகளை உபயோகப்படுத்திய பின்பும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...