தூத்துக்குடி, பிப்.13: தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் 51 ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் வாரம் தோறும் முன்னெச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கின்றனர். அதனை தொடர்ந்து அடுத்த வார நாட்களில் அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதில் பல பகுதிகளில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகின்றனர். மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி தாமோதர நகர் மெயின் பகுதிகள், குறுக்கு சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அடுத்தடுத்து ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. இதில் அப்பகுதியில் இருந்த கடைகள் உள்ளிட்ட 51 ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பின்போது மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர். இதில் அப்பகுதியில் உள்ள சிறிய கடைகள், பெட்டி கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும், பெரிய நிறுவனங்கள், கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை முன்னிட்டு தென்பாகம் எஸ்ஐ வீரபாகு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.