×

மேலகரம் பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் சுகாதாரகேடால் பரவும் மர்மக்காய்ச்சல்

தென்காசி,பிப்.13:  தென்காசியை அடுத்த மேலகரம் பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் மர்ம காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி  அடுத்த மேலகரம் பேரூராட்சி குடியிருப்பு தெற்குதெரு பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் இருவர் என்ற அளவிற்கு காய்ச்சல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  இந்தப்பகுதியில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காய்ச்சல் காரணமாக அந்த தெருவில் உள்ள பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  சுகாதாரத்துறையின் சார்பில் நேற்று அந்தப் பகுதிக்கு சென்று மக்களை பரிசோதித்து ஊசி மற்றும் மாத்திரை வழங்கியுள்ளனர். இதற்கிடையே குடியிருப்பு தெற்குதெரு பகுதியில் குப்பைகள் மற்றும் சாக்கடை நீர் காரணமாக நோய்கள் பரவுகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவுநீரோடை சுத்தம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது என்றும் மேலும் அந்த பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கிடப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா