திருவாரூர், பிப்.13: சர்வதேச அளவில் நடைபெற்ற ஒலிம்பியாட் தேர்வில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்ற திருவாரூர் விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களை தாளாளர் மற்றும் முதல்வர் பாராட்டினர். டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச அறிவியல் மற்றும் கணித ஒலிம்பியாட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற இந்த தேர்வினை உலகம் முழுவதும் இருந்து 30 நாடுகளை சேர்ந்த 50 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் திருவாரூர் விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி பள்ளியை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் சர்வதேச கணித ஒலிம்பியாட் தேர்வில் மொத்தம் தேர்வு எழுதிய 140 மாணவர்களில் மேற்படி விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளியில் முதல் வகுப்பு பயிலும் மாணவர் ரோகித் சர்வதேச அளவில் தங்கப்பதக்கமும் மாணவி சுபிக்ஷா வெள்ளிப் பதக்கமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதேபோல் மற்றொரு மாணவி அஸ்விதா மற்றும் மாணவர் விக்னேஷ் இருவரும் சிறப்பு தகுதி பெற்று பதக்கமும் பரிசு தொகையும் பெற்றுள்ளனர். மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி பூஜா மற்றும் 4ம் மாணவன் தருண்சஞ்சய் ஆகிய இருவரும் அடுத்து நடைபெறும் தேசிய அளவிலான தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர். இதைத் தவிர ஒவ்வொரு வகுப்பிலும் பள்ளி அளவில் 10 மாணவர்கள் தங்கப்பதக்கமும் ,11 மாணவர்கள் வெள்ளிப்பதக்கமும், 10 மாணவர்கள் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர். இந்நிலையில் சர்வதேச அளவில் தங்க பதக்கம் பெற்ற மாணவர் ரோகித் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவி சுபிக்க்ஷா உட்பட அனைத்து மாணவர்களையும் பள்ளி தாளாளர் ஜனகமாலா, முதல்வர் சுஜாசந்திரன் மற்றும் ஒலிம்பியாட் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் ராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.