கடையம், பிப்.12: கடையம் அருகே நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் சிவசைலத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கடையம் அருகே சிவசைலம் கிராமம் புதுக்குடியிருப்பில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கடனா நதி அணை அரசபத்து காலுக்கு பாத்தியப்பட்ட 1300 ஏக்கர் மற்றும் நீலமேகபுரம், சம்பன்குளம், அழகப்பபுரம், சிவசைலம், கல்யாணிபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு மற்றும் பங்களா குடியிருப்பு உள்ளிட்ட கிராம பகுதியில் உள்ள சுமார் 700 ஏக்கரில் விளையும் நெல்லை விவசாயிகள் இங்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பிசான பருவத்திற்கு நாற்று நடப்பட்டன. தற்போது சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. ஆனால் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படாததால் நெற்பயிர்கள் முருகி வயலில் வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.