சுரண்டை,பிப்.12: சாம்பவர் வடகரையில் நள்ளிரவில் வீட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சாம்பார் வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகேஸ்வரி(30). நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவர் திருமலைக்குமார் மற்றும் குழந்தைகளுடன் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள செவிலியர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகேஸ்வரி தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், மகேஸ்வரியின் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலையில் வீட்டிற்கு வந்த போது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவிலிருந்து ரூ.10ஆயிரம் மற்றும் 3கிராம் நகை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஜ. செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.