×

பெரியாறு ஆயக்கட்டு பகுதியை மறுஅளவீடு செய்ய வலியுறுத்தல்

சிவகங்கை, பிப்.12: பெரியாறு, வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்பட ஐந்து மாவட்ட விவசாயிகள் பயன்பெறுகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு, பேரணை முதல் கள்ளந்திரி வரை இரு போகம், கள்ளந்திரி முதல் சிவகங்கை அருகே சோழபுரம் எட்டுச்சேரி கண்மாய் வரை ஒரு போகம், திருமங்கலம் விரிவாக்க கால்வாய், 18ம் கால்வாய், லெசிஸ் கால்வாய், 48வது கால்வாய், கட்டாணிப்பட்டி 1-2கால்வாய் என பல ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட ஒப்பந்தப்படி பெரியாறு தண்ணீர் வினியோக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளது. இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒரு போக பாசன பகுதியாக உள்ளன. பெரியார் பாசன பகுதி மேலூர் பிரிவின் கீழ் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஆண்டுதோறும் இப்பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நகர்மயமாதல் அதிகரித்துள்ளதால் பெரியாறு பாசன விவசாய ஆயக்கட்டு குறித்து மறு அளவீடு செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: பாசன பகுதிகளில் கட்டுமானங்கள் அதிகரித்து விட்டன. எனவே 5 மாவட்டங்களில் பெரியாறு, வைகை ஆயக்கட்டு குறித்து மறு அளவீடு செய்து அதன்படி நீர் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனால் சிவகங்கை மாவட்டம் அதிக பயன்பெற வாய்ப்புள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீட்டிப்பு மற்றும் விஸ்தரிப்பு கால்வாய்களை நேரடி கால்வாயாக(ரெகுலர்) மாற்ற வேண்டும்.
மாணிக்கம் நீட்டிப்பு கால்வாய், சிங்கம்புணரி, திருப்பத்தூர் நீட்டிப்பு விஸ்தரிப்பு கால்வாய், லெசிஸ் நீட்டிப்பு விஸ்தரிப்பு கால்வாய், 9வது நீட்டிப்பு கால்வாய், இலுப்பகுடி நீட்டிப்பு கால்வாய், படமாத்தூர் நீட்டிப்பு கால்வாய் ஆகியன சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய்களை நேரடி ஆயக்கட்டு கால்வாயாக மாற்றினால் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்றனர்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா