வங்கியில் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் உழவர் கடன் அட்டை பெறலாம்

திருச்சி, பிப்.12: திருச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதித் திட்டத்தில் உழவர் கடன் அட்டை பெறுவதற்கு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் உழவர் கடன் அட்டைகள் பெறலாம் என திருச்சி கலெக்டர்சிவராசு தெரிவித்துள்ளார். உழவர் கடன் அட்டை வழங்குவதற்காக சிறப்பு பிரசாரம் மத்திய அரசால் கடந்த 8ம் தேதியிலிருந்து துவங்கப்பட்டுள்ளது. இப்பிரச்சாரத்தின் மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. இந்த கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய, சேமிப்பு திட்ட கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி உழவர் கடன் அட்டையை பெற்று மானிய சலுகையுடன் வங்கி கடன் பெறலாம். உழவர் கடன் அட்டையை பெற்றுள்ள விவசாயப் பயனாளிகள் தங்களின் வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பை உயர்த்த விண்ணப்பிக்கலாம்.

செயல்படாத உழவர் கடன் அட்டை உள்ளோர் வங்கி கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும் புதிய கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம். உழவர் கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு தங்களது வங்கிக் கிளையை அணுகலாம். பிரதம மந்திரி திட்ட விவசாயிகளுக்கு கடன் அட்டை பெற இத்திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஒரு பக்க படிவத்தில் தங்களது நிலம் மற்றும் பயிர் விவரங்கள் வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதி பிரமாணம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலம் சமர்பிக்கலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: