விழுப்புரம், பிப். 12: திண்டிவனத்தில் சட்டஅமைச்சரின் வீடு அருகே ரவுடியின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தக்கோரி விழுப்புரம் எஸ்பியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். திண்டிவனத்தைச் சேர்ந்த மினிவேன் ஓட்டுநர் உரிமையாளர் சங்கத்தினர், பொதுமக்கள் விழுப்புரம் எஸ்பியிடம் அளித்த மனுவில்கூறியிருப்பதாவது: திண்டிவனம் ரோஷணை பகுதியைச் சேர்ந்த ரவுடி கிடங்கலான்(எ)சரவண்ராஜ் என்பவர் திண்டிவனம் நகரத்தில் பங்க் கடை ைவத்துக்கொண்டு மதுபாட்டில் மற்றும் கஞ்சா போன்றவற்றை விற்று வந்தார். இந்நிலையில் கடந்தவாரம் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்திடம் முறையிட்டதின்பேரில் போலீசார் அந்த பங்க் கடையை அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், மினிவேனை நிறுத்திக்கொண்டு அதில் மதுபாட்டில், கஞ்சா ஆகியவைகளை வைத்துக்கொண்டு பட்டப்பகலில் சட்டவிரோதமாக விற்பனை செய்துவருகிறார். போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்யும்வகையில் ரவுடியின் நடவடிக்கை இருந்து வருகிறது.இதனை தட்டிக்கேட்டபோது எங்களை மதுபாட்டிலைகொண்டு கொலை செய்வதாக மிரட்டுகிறார். எங்களின் வாகனங்களை சேதப்படுத்தி விடுவதாகவும் மிரட்டுகிறார். ரவுடி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.எனவே ரவுடிமீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத்துறை அமைச்சரின் வீட்டிற்கு செல்லும் வழியில் நின்றுகொண்டு இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட்டுவரும் ரவுடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.