2019-20ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

கள்ளக்குறிச்சி, பிப். 12: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வருகிற 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. மாவட்ட போட்டிகளில் 25 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். அதாவது 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம்தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். போட்டிகளில் பங்குபெற விரும்புவர்கள் இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிப்பதற்கான ஆதார் அட்டை ,ரேஷன் கார்டு, பிறந்த தேதிக்கான சான்றிதழ், கல்வி நிறுவன அடையாள அட்டை, ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிட சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவைகளின் நகல்களை போட்டி நடைபெறுவதற்கு முன் போட்டி நடத்துபவர்களிடம் அளிக்க வேண்டும்.  

 

போட்டிகள் சரியாக காலை 9 மணிக்கு தொடங்கும். தாமதமாக வரும் வீரர்கள் கண்டிப்பாக போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் கள்ளக்குறிச்சி ஏகேடி கல்வி குழுமங்களில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. அதாவது 19 ம்தேதி அன்று நடைபெறும் கபடி, வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, இறகுபந்து போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். 20 ம்தேதி அன்று நடைபெறும் டென்னிஸ், நீச்சல் 100, 200 மீட்டர், பேக் ஸ்டோக், பிரன்ட் ஸ்டோக், பட்டர் பிளை, 400 மீட்டர் தனி நபர் மெடலி, 800 மீட்டர் பிரிஸ்டைல் (பெண்கள்), 1500 மீட்டர் பிரிஸ்டைல் (ஆண்கள்), ஜுடோ 60 கிலோ முதல் 100 கிலோ எடை வரை உள்ள ஆண்கள், ஜுடோ 48 கிலோ முதல் 78 கிலோ எடை வரை உள்ள பெண்கள், குத்துசண்டை போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம்.  

 

21 ம்தேதி அன்று நடைபெறும் தடகளம் 100 மீட்டர் முதல் 400 மீட்டர், தடைதாண்டுதல் 1500 மீட்டர், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கோல் ஊன்றி தாவுதல், நீளம் தாண்டுதல் 1000 மீட்டர்(ஆண்கள்), 800 மீட்டர் மற்றும் 500 மீட்டர் (பெண்கள்) போட்டியில் பங்கேற்கலாம். மேற்படி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் வருகிற 18 ம்தேதி அன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஆன்லைனில் பதிவு செய்யாதவர்கள் கண்டிப்பாக போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது.

மாவட்ட அளவிலான குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெறும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.750, மூன்றாம் பரிசு ரூ.500 காசோலையாக வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்கள் பெற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 9943509394, 8675773551, 7401703485 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.

Related Stories: