திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 4வது வட்டத்திற்கு உட்பட்ட எர்ணாவூர் மகாலஷ்மி நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து, மணலி விரைவு சாலையை இணைக்கும் மகாலட்சுமி நகர் சாலை, சுமார் 1 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. இச்சாலை, கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழை காலத்தில் இந்த சாலை சேறும் சகதியுமாகவும், வெயில் காலத்தில் புழுதி பறந்தும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். அவசர காலங்களில் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலை பள்ளத்தில் தடுமாறி விழுந்து செல்கின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.