சென்னை: மலேசியாவுக்கு வேலைக்கு சென்றவரை அடித்து சித்தரவதை செய்த ஓட்டல் உரிமையாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலம் பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து புலம் பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொன்குமார் அளித்த பேட்டி: தேவக்கோட்டை, நாச்சாயார்புரத்தை சேர்ந்தவர் முகமதுயூசப். 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் 2018ல் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு சுபாங்ஜெயா பகுதியில் கார் கழுவும் வேலையில் சேர்ந்துள்ளார். பிறகு, லெபாஅம்பாங் பகுதியில் காரைக்குடி செட்டிநாடு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த ஓட்டல் தேவக்கோட்டை, கண்டதேவி பஞ்சாயத்து தலைவர் முருகன் என்பவருக்கு சொந்தமானது. மாதம் 1300 வெள்ளி சம்பளம் தருவதாக கூறி, 2 மாதம் மட்டுமே சம்பளம் கொடுத்துள்ளனர். பின்னர், தர மறுத்துள்ளனர். இதனால் முகமதுயூசப் சம்பளம் கேட்டுள்ளார். பிறகு கண்டதேவி பஞ்சாயத்து தலைவர் முருகன் உத்தரவுப்படி அடித்து சித்தரவதை செய்துள்ளனர். இதுகுறித்த செய்தி சமூக வலைதளத்தில் பரவியது. மலேசியா காவல்துறை இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. இதையடுத்து முகமதுயூசபை விமான டிக்கெட் கொடுத்து சென்னைக்கு அனுப்பியுள்ளனர். பிறகு சாலிகிராமத்திலுள்ள ஓட்டலில் அடைத்து வைத்துள்ளனர். பிறகு விருகம்பாக்கம் காவல்துறையினர் மீட்டுள்ளனர். பிறகு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றபோது போலீசார் மறுத்துவிட்டனர். மேலும் சிவகங்கை எஸ்பியிடம் புகார் தருமாறு கூறியுள்ளனர். எனவே முருகன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.