திருவெறும்பூர் அருகே 3 பெண்களை ஏமாற்றி நகை, பணம் பறிப்பு

திருவெறும்பூர், ஜன.29: திருவெறும்பூர் அருகே உள்ள அசூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற ஜோதிடர், அவரது மனைவி, மருமகன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். திருவெறும்பூர் அருகே அசூரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நித்யா. இவர் கடந்த மாதம் தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஜோதிடரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அவரை வசியம் செய்து அவரிடம் இருந்து நகை அதே போல் அவரது கணவரின் சகோதரர் மனைவியிடமிருந்து நகை மற்றும் மாமியாரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அந்த மர்ம ஆசாமி தப்பிச் சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து நித்யா துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் துவாக்குடி அருகே சந்தேகப்படும்படியாக வந்த மூன்று பேரை பிடித்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தொட்டியம் பகுதியை சேர்ந்த ஆஞ்சநேயர்(40), ஜோதிடர், அவரது மனைவி செங்கம்மாள்(38), மருமகன் ஆண்டவர்(23) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள்தான் திட்டம் போட்டு அசூரில் நித்தியா மற்றும் அவரது குடும்பத்தினரை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு தப்பியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நித்தியா குடும்பத்தினர் இழந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்ததோடு மூன்று பேரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: