பெல் குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

திருவெறும்பூர், ஜன.29: திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பெல் போலீசார் தேடி வருகின்றார். திருவெறும்பூர் அருகே பெல் வளாக குடியிருப்பை சேர்ந்தவர் லியோலாரன்ஸ்(42). இவர் பெல் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லியோலாரன்ஸ் கடந்த 22ம் தேதி தனது 11 வயது பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்ததால் தனது மகளுடனே மருத்துவமனையிலேயே தங்கிவிட்டார். இந்நிலையில் 26ம் தேதி மருத்துவமனையில் இருந்து தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் லியோலாரன்ஸ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வீட்டின் அருகில் உள்ளவர்கள் லியோலாரன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த லியாலாரன்ஸ் பெல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பெல் இன்ஸ்பெக்டர் அம்பிகா சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: