சிவகாசி, ஜன. 29: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வியியல்துறை மற்றும் காட்சித் தொடர்பியல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்ப் பண்பாட்டுத் திருவிழா ‘கைத்தறிக்கு கைகொடுப்போம் - பரப்புரை’ நிகழ்வு நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அசோக் தலைமையேற்று கைத்தறிக்குக் கைகொடுப்போம் பரப்புரையை தொடங்கி வைத்தார். அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அகத்தர கட்டமைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இளநிலை கணிதவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 200 கல்லூரி பேராசிரியர்கள், 100 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 2400 மாணவர்கள், 2500 மாணவியர்கள் கைத்தறி ஆடையை அணிந்து வந்து கைத்தறிக்கு கைகொடுப்போம் என்று பரப்புரை நிகழ்த்தினர். மக்கள் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக வீதிநாடகமும் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை உடற்கல்வியியல்துறை மற்றும் காட்சித் தொடர்பியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.