திருமங்கலம் பகுதியில் 2வது அகலரயில் பாதை பணி ஜரூர்

திருமங்கலம், ஜன. 29: மதுரையிலிருந்து கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி வரையிலான இரண்டாவது அகலரயில் பாதை பணி திருமங்கலம் பகுதியில் மும்முரமாக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை அகலரயில் பாதை பணி முடிவடைந்து ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இதை தொடர்ந்து மதுரையிலிருந்து கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி வரையிலான இரண்டாவது அகலரயில் பாதை பணி தொடங்கி நடந்து வருகிறது. இரண்டாவது அகலரயில்பாதை அமைந்தால் மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். இந்நிலையில் தற்போது இரண்டாவது அகலரயில் பாதை பணி துவங்கியுள்ளன. இதில், மதுரையிலிருந்து வாஞ்சிமணியாச்சி வரை சென்று, அங்கிருந்து தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரிக்கும் அகலரயில் பாதைகள் பிரிகின்றன. இந்த பணிகளில் தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலம்-விருதுநகர் இடையே தண்டவாளம் அமைக்கப்பட்டு, அதில் ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளன. திருமங்கலம் மேலக்கோட்டையில் முதல்முறையாக தொடங்கியுள்ள இந்த பணி தொடர்ந்து விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வரையில் முதற்கட்டமாக நடைபெற உள்ளது. இதேபோல, மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம் இடையேயும் அகலரயில்பாதை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இரண்டாவது அகலரயில்பாதை அமைவதையொட்டி திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடியில் புதியதாக ரயில்வே ஸ்டேசன்கள் அமைய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

Related Stories: