கடையம் அருகே மாதாபுரத்தில் உயரமான பேரிகார்டுகளால் விபத்து அபாயம்

கடையம், ஜன. 29: கடையம் அருகே மாதாபுரத்தில் வைக்கப்பட்டு உள்ள உயரமான பேரிகார்டுகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. கடையம்- தென்காசி மெயின் ரோட்டில் மாதாபுரம் பஸ் நிறுத்தத்தில் விபத்துகளை தவிர்க்க பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையில் இவை எதிர் எதிர் திசையில் சற்று தொலைவில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த பேரிகார்டுகள் சுமார் 6 அடி உயரத்துக்கும் மேலாக உள்ளது. பேரிகார்ட்டின் கட்டமைப்பும் இடைவெளியின்றி முழுவதுமாக மூடப்பட்டு உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள், மறுதிசையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. மேலும் குடியிருப்பு பகுதி என்பதால் பொதுமக்கள் சாலையை கடக்கும்போதும் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் இதன் அருகிலேயே தென்காசி -செங்கோட்டை பகுதிகளுக்கு குடிநீர் செல்லும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையோரத்தில் தண்ணீர் தேங்கி சகதிகாடாக உள்ளது. எனவே உயரமான பேரிகார்டுகளை மாற்றியும், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: