வேலூர், ஜன.29: வேலூர் சிட்டிங் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நியூசிட்டிங் பஜார் பகுதியில் உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஒரு கட்டித்தின் முன்பகுதி சுமார் 4 அடி தூரம் சாலையை ஆக்கிரமித்து கட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் மாநகராட்சிக்கு தகவல் சென்றது. அதன்பேரில் நேற்று காலை மாநகராட்சி 2வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் நியூ சிட்டிங் பஜார் பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை இடித்து அகற்றினர். மேலும் அப்பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள் உட்பட ஆக்கிரமிப்புகளை உடனடியாக தாங்களாகவே அகற்றவேண்டும். தவறினால் ஓரிருநாட்களில் மீண்டும் சோதனை நடத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எச்சரித்தனர்.