சேலத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் உறவினர்கள் 5பேரை விடுவிக்கக்கோரி மனு

சேலம், ஜன.29: சேலத்தில் கைது செய்யப்பட்ட, மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உறவினர்களை விடுவிக்க வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியை அடுத்த ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிவாசகம் (60). மாவோயிஸ்டான இவர், கடந்த 2 மாதத்திற்கு முன்பு கேரள வனப்பகுதியில், அம்மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் ராமமூர்த்தி நகரில் தகனம் செய்யப்பட்டபோது, அவரின் மனைவி கலா, தங்கைகள் சந்திரா, லட்சுமி மற்றும் லட்சுமியின் மகன் சுதாகர் உள்ளிட்ட சிலர், அரசுக்கு எதிராகவும், சுட்டுக்கொலை செய்தததற்கு பழி தீர்ப்போம் சபதம் எடுத்து கோஷமிட்டனர்.

இதன் அடிப்படையில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று, மனித உரிமை மீறலுக்கு எதிரான கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள மணிவாசகத்தின் உறவினர்கள், இதுவரை எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதில்லை. தேவையின்றி வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்வதுடன்,கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: