குன்னூர்,ஜன.29: குன்னூர் அருகே சோலாடா மட்டம் மற்றும் கோடமலை கிராமம் உள்ளது. இந்த இரண்டு கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றி தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி அதிகம் உள்ளதால் இரவு நேரங்களில் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்குகள், மற்றும் சாலை வசதி இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. இந்த பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக சாலை சீரமைக்காததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் இரண்டு நோயாளிகள் சிகிச்சைக்காக கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்துள்ளனர். இதே போன்று அவர சேவையான 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் கிராம பகுதிக்கு வருவதில்லை. எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள வண்டிச்சோலை பஞ்சாயத்து உறுப்பினர்கள் விரைவில் சாலை அமைக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சாலை அமைக்க வனத்துறையினர் சார்பில் ரூ. 81 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.