ஈரோடு, ஜன. 29: ஈரோடு மாவட்டம் ஒடையாக்கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் கருப்புச்சாமி (42). விவசாயி. இவர் கடந்த 26ம் தேதி இரவு வீட்டின் வராண்டாவிலும், அவரது மனைவி, மகன்கள் வீட்டினுள் அறையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணிக்கு மர்மநபர் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவரை எகிறி குதித்து, வீட்டினுள் இருந்த 2 செல்போனை திருடிக்கொண்டு செல்வதை பார்த்த கருப்புச்சாமி திருடன், திருடன் என கூச்சல் போட்டார். இதனால், அந்த மர்மநபர் மீண்டும் சுவர் எகிறி குதித்து, வெளியே நின்றிருந்த மற்றொரு நபரின் பைக்கில் ஏறி தப்பி செல்ல முற்பட்டனர். இதையடுத்து கருப்புச்சாமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அந்த மர்மநபர்களை பின்தொடர்ந்து விரட்டினர்.
இதில், அந்த மர்மநபர்கள் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் வளைவில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து, காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மர்மநபர்களை பிடித்து கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள், திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் தொங்கட்டிபாளையத்தை சேர்ந்த ஆறுச்சாமி மகன் அரவிந்த் (22), அதேபகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் கதிர்வேல் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து கருப்புச்சாமியின் வீட்டில் திருடிய 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.