புதுச்சேரி, ஜன. 29: புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், மத்திய அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் செயல்படும் திட்டம் செயல்படுத்தல் நிறுவனம் (பிஐஏ) மூலம் உலக வங்கி நிதி ஆதாரத்தின் உதவியுடன் ரூ.250 கோடி வரை மாநில அரசுக்கு நிதி வழங்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் புதுச்சேரி கடற்கரை சாலை மேரி கட்டிடம், தேங்காய்த்திட்டு துறைமுக வளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் பழைய மேரி கட்டிடம் அதே தரத்தில் ரூ.14.83 கோடி செலவில் கட்டப்படுகிறது. தொடக்கத்தில் தரமான முறையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இடையில் தரமில்லாத பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டு வருகிறது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக, மேரி கட்டிடத்தின் பார்வையாளராக இருந்த பொறியாளருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறையாக நடைபெறாததால், அதன் பொறுப்பாளர் மாணிக்தீபனை மாற்ற வேண்டும். உலக வங்கியின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரிக்க வேண்டும். கட்டுமானப்பணிகளில் நடந்த ஊழல் குறித்து பாஜக சார்பில் பொறியாளர் வைத்து ஆய்வு செய்யவுள்ளோம். இதுதொடர்பாக கவர்னரும் ஒரு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். புதுச்சேரியில் செயற்கையாக நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் நாராயணசாமியே காரணம். புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால், நாங்களே மத்திய அரசிடம் எடுத்துக்கூறி பணிகளை நிறத்த முயற்சிப்போம். குடியுரிமை சட்டத்தால் புதுவையில் யாருக்கும் பாதிப்பில்லை. இதுகுறித்து முதல்வர் பேசிக்கொண்டிருப்பது அர்த்தமில்லாதது, என்றார்.