புதுச்சேரி, ஜன. 29: புதுச்சேரி லாஸ்பேட்டை நவீன மீன் அங்காடியில் பெண் வியாபாரிகள் மோதலில் ஈடுபட்டு அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி லதா (42). இவர் லாஸ்பேட்டையில் அமைந்துள்ள நவீன மீன் அங்காடியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தன்னிடம் மீன் வாங்கும் பொதுமக்களிடம், அந்த மீன்களையும் அவரே சுத்தம் செய்து கொடுத்துள்ளார். இதற்கு மீன்களை சுத்தம் செய்து கொடுப்பதற்காக அங்கு தனி பிரிவாக செயல்படும் பெண்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து லதா தனது தங்கையையும் மறுநாள் அங்கு அழைத்து வந்து மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபடவே, பாதிக்கப்பட்ட மீனவ பெண்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பின்னர் இதுபற்றி நிர்வாக அதிகாரியான மணிகண்டனிடம் மீன்களை சுத்தம் செய்யும் பெண்கள் முறையிட்டனர். இதையடுத்து லதாவை கண்டித்த அதிகாரிகள், அவரது கடை அமைந்துள்ள நுழைவு வாயிலை ஒருமணி நேரம் இழுத்து மூடி பூட்டு போட முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லதா அங்கிருந்த அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மீன் சுத்தம் செய்து கொடுக்க சரியாக யாரும் இங்கு வருவது கிடையாது.