தென்காசி, ஜன. 28: தென்காசியில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, சப்.கலெக்டர் மரகதநாதன், ஆர்.டி.ஓ.பழனிக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய்துறை அதிகாரிகள், தாசில்தார்கள், நகராட்சி, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், யூனியன் அதிகாரிகள், கல்வித்துறை, வனத்துறை, காவல்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் வனவேங்கைகள் கட்சியின் மாநில பொது செயலாளர் உலகநாதன், மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாநில செயற்குழு மாரியப்பன், வெங்கடேஷ்குமார் ஆகியோர் அளித்துள்ள மனுவில், தென்காசி வள்ளிநகர் பகுதியில் குறவன் பழங்குடி மக்கள் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். பெண்கள் கழிப்பிடம், சாலைவசதி மற்றும் வாறுகால் வசதிகள் இல்லை. இதனால் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாறுகால் வசதி இல்லாததால் வீட்டின் முன்பு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். வனவேங்கைகள் கட்சி இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் குமார் அளித்துள்ள மனுவில், கடையநல்லூரில் குறவர் பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுடுகாடு தற்போது சில தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றி எரியூட்டும் மையம் அமைத்து தர வேண்டுமென மனு அளித்துள்ளனர்.