வள்ளியூர், ஜன. 28:வள்ளியூர் முருகன் கோயில் தெப்பகுளத்தில் கால் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். வள்ளியூர், தெற்கு யாதவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கர்பாபு (29). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சவாரி முடித்து ஆட்டோவை கழுவுவதற்காக அங்குள்ள முருகன் கோயில் தெப்பக்குளத்திற்கு சென்றார். அப்போது அங்கு யாரும் இல்லை. ஆட்டோவை படி ஓரமாக நிறுத்தி கழுவிக் கொண்டிருந்தார். திடீரென்று படி கால் வழுக்கியதில் அவர் தெப்பக்குளத்திற்குள் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி தண்ணீருக்குள்மூழ்கினார். இரவில் நீண்ட நேரமாகியும் சங்கர்பாபு வீடு திரும்பாததால், அவரது மனைவி சக டிரைவர்களிடம் போன் செய்து கேட்டுள்ளார். அவர்கள் தேடி பார்த்ததில் ஆட்டோ மட்டும் தெப்பக்குளம் கரையில் நின்றது. உடனே வள்ளியூர் போலீசுக்கு ஆட்டோ டிரைவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் திருப்பதி, விஏஓ கணேஷ்பாபு மற்றும் போலீசார், தீயணைப்புத் துறையினருடன் தீவிர தேடுதல் நடத்தி நேற்று அதிகாலை 2 மணியளவில் சங்கர்பாபு உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.