சிதம்பரம், ஜன. 28: குரூப் 4 தேர்வு ஊழலில் பல பேருக்கு தொடர்பு இருப்பதாக திக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்று பேசினார். பின்னர் அவர் கூறுகையில், ஊழலை ஒழிக்கவே தேர்வு என்ற போர்வையை போர்த்திக் கொண்டு வந்ததுதான் நீட் நுழைவுத் தேர்வு. தேர்வுகளில் ஊழல் எப்படி கொடிகட்டி பறக்கிறது என்பது தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் நடந்த ஊழல்கள் குறித்து கடந்த இரண்டு தினங்களாக வருகின்ற தகவல்களே சாட்சி. இது தேர்வுகள் எப்படி நடக்கிறது என்பதை
காட்டுகிறது.
இதுசம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் வந்தபோது 100 பேருக்கு மேல் ஆள்மாறாட்டம் செய்து இருக்கிறார்கள் என அவர்களே
நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்கள். ஊழலுக்கு அப்பாற்பட்டது தான் நீட் தேர்வு என்று கூறுவது தவறான ஒன்று. அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது. இது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும். சமூக நீதிக்கு விரோதம். மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது. அதை எதிர்த்துதான் தமிழ்நாடு முழுவதும் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். வருகிற 30ம் தேதி சென்னையில் இந்த பிரசாரம் முடிகிறது. இதற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு ஊழல் தோண்டத் தோண்ட வருகிறது. இன்னும் நிறைய பேருக்கு தொடர்பு உள்ளது என அவர்களே சொல்கிறார்கள். ஊழலின் ஊற்றுக்கண் எங்கே இருக்கிறது என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என கூறினார். பேட்டியின்போது திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ, திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.