புதுச்சேரி, ஜன. 28: புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி லிங்காரெட்டி பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கட்டுப்பாட்டில் பாண்கோஸ் பள்ளி இயங்கி வருகிறது. சர்க்கரை ஆலை தொடர் நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கான பணத்தை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, பாண்கோஸ் பள்ளியில் படிக்கும் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட முடியாமல் உள்ளனர். கல்வி கட்டணம் கட்டாததால் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் பள்ளி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.